உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் அருகே வாலிபர் கழுத்து அறுத்து கொலை

Published On 2023-11-14 10:06 GMT   |   Update On 2023-11-14 10:06 GMT
  • செல்வராஜை கொலை செய்தவர்கள் யார் என்பது தெரியவில்லை.
  • போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் .

வேலூர்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள அம்மனாங்குப்பம் கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 30). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவரது வீட்டின் அருகே உலக்காசி சாலையில் தென்னந்தோப்பு ஒன்று உள்ளது. இந்த தோப்பில் இன்று காலை செல்வராஜ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதைக்கண்டு பதறிப்போன அந்தப் பகுதி பொதுமக்கள் குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் செல்வராஜ் உடலில் தலை தொங்கியபடி இருந்தது.

போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

செல்வராஜை கொலை செய்தவர்கள் யார் என்பது தெரியவில்லை.

இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் .நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை அன்று செல்வராஜ் அவரது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மற்றொரு கும்பலுக்கும் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அடிதடி உண்டானது. இந்த தகராறு காரணமாக செல்வராஜ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த கோஷ்டி மோதலில் ஈடுபட்ட நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செல்வராஜுக்கு வேறு ஏதாவது முன் விரோதம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News