வைப்பாற்றில் கழிவுநீர்: விருதுநகர் மாவட்ட கலெக்டர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
- வைப்பாற்றில் கழிவுநீர்கலக்கும் விவகாரம் தொடர்பாக விருதுநகர் கலெக்டர் பதிலளிக்க வேண்டும்.
- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
விருதுநகர்
சாத்தூர் அருகே படந்தாலை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வைப்பாற்றில் கழிவுநீர் கலக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் வருசநாட்டு மலை பகுதியில் இருந்து வைப்பாற்றுக்கு தண்ணீர் வருகிறது.
இந்த தண்ணீர் மூலம் சாத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் ஆற்றின் பல இடங்களில் கழிவுநீர் கலப்பதால் மாசு அடைந்துள்ளது. இதுதொடர்பாக நகராட்சியிடமும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திட மும் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுவாமிநாதன் அமர்வு முன்பு வந்தது.அப்போது வைப்பாற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக விருதுநகர் மாவட்ட கலெக்டர், மாசு கட்டுப்பாட்டு அலுவலர், பொதுப்பணித்துதுறை அதிகாரி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.