உள்ளூர் செய்திகள்

சொத்து பிரச்சினை: கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு

Published On 2022-11-24 07:26 GMT   |   Update On 2022-11-24 07:26 GMT
  • ராஜபாளையத்தில் சொத்து பிரச்சினையில் கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
  • ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ராஜபாளையம்

ராஜபாளையம் மேல ஆவாரம்பட்டி பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் கோபால் (வயது 60). இவரது மனைவி அழகம்மாள் (57). கோபால் வீட்டின் அருகே அவரது சகோதரர் கிருஷ்ணன் (58) வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணன் தனது அண்ணியின் உறவினருக்கு சொந்தமான வீட்டை வாங்கியதாக தெரிகிறது. அதை ஏமாற்றி வாங்கி விட்டதாக கோபாலும், அவரது மனைவியும் கருதினர். இதனால் சகோதரர்களுக்கு இடையே முன் விரோதம் ஏற்பட்டது. அடிக்கடி 2 குடும்பத்தினரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று கிருஷ்ணன், தனது மனைவி பொன்னுத்தாயுடன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அரிவாளுடன் வந்த அண்ணி அழகம்மாள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென 2 பேரையும் சரமாரியாக வெட்டினார். இதில் கிருஷ்ணன், அவரது மனைவிக்கு தலை, கைகளில் வெட்டு விழுந்தது.

அப்போது கிருஷ்ணன் அங்கிருந்த மண்வெட்டியால் அழகம்மாளை தாக்கினார். இதில் அவரும் படுகாயமடைந்தார். 3 பேரும் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News