வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி ரூ.3 லட்சம் மோசடி;
- வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி ரூ.3 லட்சம் மோசடி நடந்துள்ளது.
- மோசடியில் ஈடுபட்ட அக்காள்-தம்பியை மல்லாங்கிணறு போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர்
காரியாபட்டி அருகே உள்ள தோனுகால் பகுதியை சேர்ந்தவர் பழனிக்குமார் (வயது 33). இவருக்கு திருச்சியை சேர்ந்த அந்தோணி மற்றும் அவரது சகோதரி புனிதா ரோசி ஆகியோர் அறிமுகமாகினர்.
தங்களுக்கு டெல்லியில் செல்வாக்கு உள்ளதாகவும், தங்களால் நல்ல வேலை வாங்கி தரமுடியும் எனவும் ஆசைவார்த்தை கூறினர்.
மேலும் வேலைக்கு ரூ.9 லட்சம் செலவாகும் என்றும் கூறி உள்ளனர். அதை நம்பிய பழனிக்குமார் தனது உறவினர்கள், நண்பர்களின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.8 லட்சத்தை புனிதாரோசி வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். பின்னர் டெல்லி சென்று அவர்களிடம் நேரடியாக ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார்.ஆனால் அவர்கள் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பிதரவில்லை. இதை யடுத்து பழனிக்குமார் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவர்களை அழைத்து விசாரித்த பின்னர் ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்தை திருப்பி கொடுத்தனர். மீதி பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர்.
இதுகுறித்து மீண்டும் போலீசில் பழனிக்குமார் புகார் செய்தார். மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்காள்-தம்பியை தேடி வருகிறார்கள்.