- பட்டாசு தொழிலாளர்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
- 6-க்கும் மேற்பட்டோர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி முருகன் காலனி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 28). இவரது சரக்கு வாகனத்தில் 10-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்றார்.
அந்த சரக்கு வாகனம் சாத்தூர் அருகே சந்தையூர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பட்டாசு தொழிற்சாலைக்கு சென் றது. அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மணிப்பாரைப்பட்டி விலக்கு பகுதியில் சென்றபோது பின்னால் வந்த கார், சரக்கு வாகனத்தை முந்த முயன்றது.
அப்போது எதிர்பாராத விதமாக சரக்கு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சிவகாசி முருகன் காலனியை சேர்ந்த முருகன் (28), டிரைவர் மணிகண்டன் (24), ஆகாஷ் (20), முத்துமாரியப்பன் (45), ஜெயப்பிரபு (42), முத்துமாரி (30), பாண்டி கணேஷ் (18), முத்துக்குமார் (20) ஆகியோர் காயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் அங்கிருந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேர் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக காரில் வந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த எடிசன் (34), நிஷான் (29) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.