புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது
- புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தடை செய்யப்பட்ட புகையிலை வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.எஸ்.பி. சபரிநாதன் உத்தரவிட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிகஅளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் தடை செய்யப்பட்ட புகையிலை வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.எஸ்.பி. சபரிநாதன் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து போலீசார் ஸ்ரீவில்லி புத்தூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மஞ்சு பூ தெரு சந்திப்பில் கொத்தங்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி (வயது 28), ஸ்ரீவில்லிபுத்தூர் முடுக்கு தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (41) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
அவர்களிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 28 கிலோ 584 கிராம் இருப்பது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.14 ஆயிரத்து 856 ஆகும்.
இதைத்தொடர்ந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.