- விருதுநகர் மாவட்டத்தில் 2 சிறுமிகள் திடீரென மாயமானார்கள்.
- வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை.
விருதுநகர்
ராஜபாளையம் அருகே உள்ள நத்தனேரியை சேர்ந்தவர் சின்னதுரை(21). தூத்துக்குடி கல்லூரியில் மருத்துவபடிப்பு படித்து வருகிறார். இவரது 16 வயது தங்கை தளவாய்புரத்தில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று தனது தாயிடம் மாடியில் சென்று படிக்க போவதாக சிறுமி கூறி சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து மாடிக்கு சென்று பார்த்தபோது சிறுமி அங்கில்லை.
எங்கு சென்றார் என்று தெரியவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து சின்னதுரை கொடுத்த புகாரின்பேரில் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி அருகே உள்ள வேப்பம்குளத்தை சேர்ந்தவர் வள்ளி. இவரது 16 வயது மகள் காரியாபட்டி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பேக்கிரியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதையடுத்து மகள் வேலை பார்த்த பேக்கரிக்கு வள்ளி போன் செய்து விசாரித்தபோது சிறுமி சம்பளத்தை பெற்றுக்கொண்டு வேலையில் இருந்து நின்று விட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் வள்ளி கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.