கோவில் நிலத்தை மீட்டு தர கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
- கரக செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு கோவிலுக்கு வருவாய் பெருக்க பொது ஏலம் விட வேண்டும்.
- கோவிலுக்கு சொந்தமான 32.5 ஏக்கர் நிலம் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா சிக்கார்தனஅள்ளி கிராமத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்கள் ஊரில் பழமை வாய்ந்த கரக செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 32.5 ஏக்கர் நிலம் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த நிலத்தை பரம்பரை அறங்காவலர் மட்டும் அனுபவித்து வருகிறார். மேலும் திருவிழா காலங்களில் திருவிழா நடத்துவதற்கு கோவில் நிலத்தை பயன்படுத்து வதற்கும், திருவிழா நடத்துவதற்கும், உண்டான செல வினங்களை ஏற்றுக்கொள்ளாமல் கோவிலில் வரும் வருமானத்தையும் கோவில் நிலத்தையும் பல ஆண்டுகளாக ஒருவரே அனுபவித்து வருகிறார்.
கோவில் திருப்பணி செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறார். ஊர் மக்களாகிய நாங்கள் எங்களுடைய சொந்த செலவில் திருவிழாக்களை நடத்தி வருகிறோம்.
மேலும் கரக செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு கோவிலுக்கு வருவாய் பெருக்க பொது ஏலம் விட வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கோவில் சொத்தை மீட்டெடுக்க வேண்டும். கோவில் திருவிழாவை சிறப்பாக நடத்த வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.