உள்ளூர் செய்திகள்

விபத்தில் காயமடைந்த வாலிபர் சாவு

Published On 2022-09-12 09:40 GMT   |   Update On 2022-09-12 09:40 GMT
  • தாக்கியதால் இறந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு
  • போலீசார் விசாரணை

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் மகன் சுதாகர் (வயது 26) கட்டிடம் மேஸ்திரி வேலை செய்து வந்தார்.

விபத்து

கடந்த புதன்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் சுதாகர் தனது வீட்டிலிருந்து குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பெரும்பாடி அருகே உள்ள துரைப்பட்டி என்ற கிராமத்துக்கு அருகே வரும்போது லட்சுமி (65) என்ற பெண் மீது மோதியதாக கூறப்படுகிறது.

அப்போது இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சுதாகர் குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

லட்சுமி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சுதாகரின் தாயார் பொன்னியம்மாள் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் எனது மகன் சுதாகர் மோட்டார் சைக்கிளில் வரும்போது விபத்து ஏற்பட்டதாகவும் அப்போது அப்பகுதியை சேர்ந்தவர்கள் எனது மகன் சுதாகரை சரமாரியாக தாக்கியதால் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக கூறியுள்ளார்.

இதனிடையே சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் சுதாகர் பரிதாபமாக இறந்தார். அந்த விபத்து தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இறந்து போன சுதாகரின் உறவினர்கள் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு வந்து போலீசாரிடம் விபத்து என்ற வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்ய வேண்டும்.

விபத்து நடந்த போது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தாக்கியதால்தான் சுதாகர் இறந்துவிட்டார் என கூறினார்கள்.

இதனை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி கிராம மக்களிடம் சுதாகரின் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கையின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதி அளித்தார்.

இறந்துபோன சுதாகருக்கு மோனிஷா என்ற மனைவி உள்ளார். திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது.

Tags:    

Similar News