வேலூர் பாலாற்றில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் கரைப்பு
- குடும்பத்துடன் வந்து சிலைகளை கரைத்தனர்
- பொதுமக்கள் சிறப்பு பூஜை செய்தனர்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பொதுமக்களும் பலர் தங்களது வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.
அதைத்தொடர்ந்து வேலூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது சிலைகள் அனைத்தும் சதுப்பேரி ஏரியில் கரைக்கப்பட்டன.
தற்போது தொடர் மழை காரணமாக வேலூர் பாலாற்றில் வெள்ளம் செல்வதால் ஏராளமான பொதுமக்கள் சிலைகளை கரைத்தனர்.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாலாற்று பாலங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட சிலைகளை வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
பின்னர் சிலைகளை பாலாற்றில் தூக்கி வீசி கரைத்தனர். சிலர் பாலாற்றில் இறங்கி கரையோரம் பூஜை செய்து வழிபட்டனர்.
இதே போல பாலாற்றின் கரையோரம் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான சிலைகளை பொதுமக்கள் கரைத்தனர்.
வீடுகளில் இருந்து குடும்பத்துடன் வந்து சிலைகளை கரைத்து சென்றனர்.
சிலைகளை ஆற்றில் தூக்கி வீசிய குழந்தைகள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.
இதனால் பாலாற்று பாலம் பரபரப்பாக காணப்பட்டது.