மலைப்பாதையில் மயங்கி விழுந்த வாலிபர்
- ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் அழைத்து சென்றனர்
- பழுதடைந்த மலை கிராம சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
அணைக்கட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அடுத்த தீத்தானூர் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தீப் ( வயது 17). இவர் கடந்த சில மாதங்களாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார்.
சந்தீப் ஜமுனாமரத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று புற நோயாளியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அங்குள்ள டாக்டர்கள் சந்தீப்பை மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு செல்லும்படி பரிந்துரை செய்துள்ளனர்.
சந்தீப் தனது சொந்த ஊரான தீத்தானூர் மலை கிராமத்திலிருந்து குடிகம் மலை, கத்தியப்பட்டுமலை, பெரியஏரியூர், ஒடுக்கத்தூர் வழியாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி பைக்கில் சந்தீப் தனது பெற்றோருடன் குடிகம் வழியாக கத்தியப்பட்டு மலைகிராமத்தில் இருந்து இன்று காலை வந்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென சந்திப்புக்கு வலிப்பு வந்து மயங்கி கீழே விழுந்தார்.
இது குறித்து அந்த மலை கிராம மக்கள் பீஞ்சமந்தைக்கு புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகன டிரைவருக்கு போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
பைக்கில் அழைத்து சென்றனர்
ஒரு மணி நேரம் கழித்து டிரைவர் சந்தீப் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். மலைகிராம சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் ஆம்புலன்ஸ் வாகனம் மலைப்பகுதியில் ஏறாது.
எனவே அவரை மலையடிவாரத்திற்கு அழைத்து வந்து விடுங்கள். அங்கிருந்து ஆம்புலன்ஸில் கொண்டு செல்வதாக டிரைவர் தெரிவித்து ள்ளார்.
இதன் அடுத்து மலை கிராம மக்கள் அவரை மிகவும் சிரமத்துடன் பைக்கில், பெரிய ஏரியூர் மலையடிவாரத்திற்கு அழைத்து வந்ததனர்.
அவர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அடுக்கம்பாறையில் தீவிர சிகிச்சை பிரிவியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மலை கிராமங்களுக்கு அவசர நேரத்தில் உதவு வதற்காகவே ஆம்புலன்ஸ் சேவை தொடங்க ப்பட்டுள்ளது.
சரியான சாலை வசதி இல்லாததால் வானங்கள் சொல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் பழுதடைந்த மலை கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.