அரசு பஸ் சிறை பிடித்து பொதுமக்கள் மறியல்
- சாலையை சீரமைக்க கோரி நடத்தினர்
- பஞ். துணைத்தலைவர் தீக்குளிக்க முயற்சி
வேலூர்:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த அமிர்தியில் சிறுவன உயிரின பூங்கா உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தினந்தோறும் சென்று வருகின்றனர். விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இதில் வேலூரில் இருந்து பென்னாத்தூர், நாகநதி மற்றும் நஞ்சுகொண்டாபுரம் வழியாக செல்லும் சாலையை அரசு பஸ்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் பயன்படுத்து கின்றனர்.
நாகநதி கூட்ரோட்டில் இருந்து அமிர்தி பூங்கா வரை உள்ள சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.
தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் தற்போது சாலை முழுவதும் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.
மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலை சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அதிக அளவில் விபத்துகளும் நடக்கிறது.
இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் கிராம மக்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர். மேலும் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
நாகநதியில் இருந்து அமிர்தி செல்லும் சுமார் 8 கிலோமீட்டர் சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த வழியாக செல்லும் நாகநதி, மேதல்பாடி, வேட கொல்லைமேடு, நஞ்சு கொண்டாபுரம், அமிர்தி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே அமிர்தி சாலையை சீரமைக்க கோரி அந்த பகுதி மக்கள் பலமுறை வனத்துறை மற்றும் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த நஞ்சுகொண்டாபுரம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை அமிர்தியில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி கோஷமிட்டனர்.
தீக்குளிக்க முயற்சி
அப்போது ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கன்னியப்பன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தகவல் அறிந்த வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டக்கா ரர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதித்தது.