உள்ளூர் செய்திகள்

தொங்குமலை தரைப்பாலம் மழைநீரில் மூழ்கிய காட்சி.

அணைக்கட்டு அடுத்த தொங்குமலையில் மழைநீரில் தரைப்பாலம் மூழ்கியதால்

Published On 2023-09-03 14:11 IST   |   Update On 2023-09-03 14:11:00 IST
  • 12 மலை கிராம போக்குவரத்து துண்டிப்பு
  • பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அணைக்கட்டு:

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலைப்பகுதியில் பீஞ்சமந்தை, ஜார்த்தான்கொல்லை, பாலாம்பட்டு ஆகிய மலை ஊராட்சிகளில் சுமார் 80-க்கும் மேற்பட்ட மலை குக் கிராமங்கள் உள்ளன. இதில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

பீஞ்சமந்தை மலை ஊராட்சியில் இருந்து பலாம்பட்டு மலை ஊராட்சிக்கு செல்லக்கூடிய சாலையில் தொங்குமலை பகுதியில் காட்டாற்று வெள்ளம் செல்லக்கூடிய ஆறு செல்கின்றது. இந்த ஆற்றை கடந்து தொங்குமலை, பாலாம்பட்டு, நெக்னி, தானிமரத்தூர், அரசமரத்தூர், தேக்குமரத்தூர் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செல்கின்றனர்.

மலைகளில் இருந்து மழைநீர் சிறு ஓடைகள் மூலம் ஆறாக உருவெடுத்து அமிர்தி வழியாக சென்று நாகநதி ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்றை கடந்து செல்வதற்காக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தற்போது அந்த வழியாக சென்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை பீஞ்சமந்தை, பாலாம்பட்டு, தொங்குமலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கனமழையின் காரணமாக ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டு தொங்கும் மலையில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியது.

இதனால் நேற்று முதல் 12 கிராம மக்களின் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டடுள்ளது. இதனால் மலைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து, கடும் அவதி அடைந்துள்ளனர். நேற்று இரவு முதல் அந்த பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

தரைப்பாலத்தின் 2 பக்கமும் தடுப்புச் சுவர்கள் இன்றி ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. குழந்தைகளுடன் அந்த வழியாக செல்லும் போது மிகவும் அச்சத்துடன் பாலத்தை கடக்கிறோம்.

இரவு நேரத்தில் அந்த வழியாக பயணிக்கும்போது, தடுப்பு சுவர் இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. மழைக்காலத்தில் தொடர்ந்து மழை பெய்யும் போது சுமார் 6 மாதம் காலம் தரை பாலத்தை மழைநீர் மூழ்கடித்துவிடும்.

அப்போது எங்களின் அன்றாட வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கும்.

தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால் ஆற்றில் மழை நீர் ெசல்கிறது. இதனால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

எனவே தரைப்பாலத்தின் உயரத்தை அதிகரிப்பதோடு, தரைபாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர்கள் அமைத்து மலைவாழ் மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News