உள்ளூர் செய்திகள்
தோட்டப்பாளையத்தில் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் அவதி
- தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது
- உடைந்த கானாற்றின் சுவற்றை சீரமைக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூரில் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது.
வேலூர் தோட்டப்பாளையத்தில் செல்லும் கானாறு தூர் வாராததால் மழை நீருடன் கழிவு நீர் கழிவு நீர் நிரம்பி வெளியேறியது. அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது. சேறும் சகதியுமாக கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர்.
மேலும் சாலை முழுவதும் மழை நீருடன் குப்பைகள் தேங்கி சேறும் சகதியமாக மாறியது. பொதுமக்கள் சாலையில் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
கானாறை தூர்வாரி உடைந்துள்ள கானாற்றின் சுவற்றை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.