உள்ளூர் செய்திகள்

லாரியில் இருந்த பொருட்கள் எரிந்து கிடந்த காட்சி.

ஓடும் லாரியில் திடீர் தீ விபத்து

Published On 2023-03-03 09:28 GMT   |   Update On 2023-03-03 09:28 GMT
  • ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
  • போலீசார் விசாரணை

வேலூர்:

சென்னையில் இருந்து வாணியம்பாடியில் உள்ள கடைகளுக்கு அரிசி பருப்பு, நெய் மளிகை பொருட்கள் சைக்கிள் உதிரி பாகங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு லாரி ஒன்று வேலூர் வழியாக சென்றது.

லாரியை ஆம்பூரை சேர்ந்த பாஸ்கர் என்பவர் ஓட்டி வந்தார். இன்று காலை வேலூர் அடுத்த கொணவட்டம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது லாரியின் பின்பகுதியில் லேசான புகை வந்தது.

லாரியின் பின்னால் வந்த அரசு பஸ் டிரைவர் இதனைக் கண்டு உடனடியாக லாரி டிரைவருக்கு தகவல் தெரிவித்தார். லாரி சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டது. அதற்குள் தீ மளமளவென லாரி முழுவதும் பரவி பற்றி எரிய தொடங்கியது.

இதுகுறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். வேலூர் தீயணைப்பு நிலையத்தில் வாகனங்கள் இல்லாததால் காட்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதற்குள் லாரியில் இருந்த ரூ 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முழுதும் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்த்து அடித்து தீயை கட்டுப்படுத்தினர்.

தீ விபத்து குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News