உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம் - பரபரப்பு

Published On 2023-12-01 14:12 IST   |   Update On 2023-12-01 14:12:00 IST
  • வேலூர் அல்லாபுரத்தில் சேரும் சகதியுமான சாலை
  • மழைக்காலம் தொடங்கி உள்ளதால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம்

வேலூர்:

வேலூர் மாநகராட்சி 51-வது வார்டுக்கு உட்பட்ட அல்லாபுரம் அம்பேத்கர் நகர், ஜேஜே நகர், கே.கே.நகரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாதாளச்சாக்கடை திட்டத்திற்காக தெருக்கள் முழுவதும் பள்ளம் தோண்டப்பட்டது.

பணிகளும் நிறைவு பெற்றது. இருப்பினும் இன்னும் சாலை அமைக்கவில்லை.இதனால் அப்பகுதி முழுவதும் சேறும், சகதியாக மாறியுள்ளது.

பொதுமக்கள் வாகனங்களிலும், நடந்து கூட செல்ல முடியாத வகையில் இருப்பதாக கூறி மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தனர். இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை சாலையில் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

இப்பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. அதன்பிறகு சாலை அமைக்கவில்லை.

இந்த நிலையில் தான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாதாளச்சாக்கடை திட்ட பணிக்காக பள்ளம் தோண்டி குழாய் அமைக்கப்பட்டது. இதனால் சாலை முழுவதும் சேறும், சகதியாக மாறியுள்ளது.

வீட்டை விட்டு வெளியே நடந்து கூட செல்லமுடியவில்லை.அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம்.

உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News