உள்ளூர் செய்திகள்

ஐ.டி. ஊழியர், ஆசிரியரிடம் ரூ.20 லட்சம் மோசடி

Published On 2023-09-07 10:00 GMT   |   Update On 2023-09-07 10:00 GMT
  • ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக கூறி நூதனம்
  • வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை

வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர், தொரப்பாடியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஆகிய இருவரின் செல்போன் வாட்ஸ்-அப் எண்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த தகவலில் `ஆன்லைனில்' பகுதி நேர வேலையில் பங்கேற்று அதிகம் சம்பாதிக்க முடியும் என கூறியுள்ளனர்.

ஆர்வம் உள்ளவர்கள் அவர்கள் அனுப்பிய இணைப்பில் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறி இருந்தனர்.

அதனை உண்மை என நம்பிய 2 பேரும் தங்களது முழு விவரத்தையும் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களையும் பதிவு செய்து அனுப்பியுள்ளனர்.

மேலும் அவர்களுக்காக தனி கணக்கு தொடங்கி அதில் முதலீடு செய்து அவர்கள் அளித்த வேலையை செய்து முடித்துள்ளனர்.

அவர்கள் கொடுத்த வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடித்ததால் அவர்கள் முதலீடு செய்த பணத்துக்கு கூடுதல் தொகையும் சேர்ந்துள்ளது.

அதன்படி சேவூரைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஊழிய தனது வங்கி கணக்கிலிருந்து கடந்த மாதம் மொத்தம் ரூ.13.64 லட்சமும், தனியார் பள்ளி ஆசிரியரும் தனது வங்கி கணக்கில் இருந்து கடந்த 30, 31- ந் தேதிகளில் ரூ.6.15 லட்சமும் அனுப்பியுள்ளனர்.

அவர்கள் கூறியபடி முதலீடு செய்த பணத்துக்கு கூடுதல் தொகை கிடைத்ததும் அதை தங்களது வங்கி கணக்கு இருவரும் மாற்ற முயன்றனர்.

ஆனால் அந்தப் பணத்தை மாற்ற முடியாததால் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் இருவரும் வேலூர் மாவட்ட சைர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News