- நாளை நடக்கிறது
- கலெக்டர் அறிவிப்பு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டுவளர்ச்சி துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவுத் துறை, நீர்வள ஆதார அமைப்பு, வனத்துறை, மாசுக் கட்டுப்பாடு வாரியம், மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை, பால்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளார்கள்.
மேலும் கடந்த மாதத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் களப்பிரச்சினைகளை களைந்திட இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்திடுமாறு வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.