வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்
- பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
- பக்தர்கள் மிளகு, உப்பு உள்ளிட்டவைகளை தேர் மீது சூறையிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர்
அணைக்கட்டு:
வெட்டுவானம் அருள்மிகு எல்லையம்மன் கோவிலில் தேர் திருவிழா கோலஅகலமாக நடைபெற்றது இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம் . அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் சிம்ம வாகனம், காமதேனு வாகனம், பூத வாகனம், நாக வாகனம், அன்ன வாகனம்,யானை வாகனம், குதிரை வாகனம், கிளி வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது.
பிரம்மோற்சவம் 7-ம் நாளான இன்று தேரோட்டம் நடந்தது. இதில் அருள்மிகு எல்லையம்மன் அலங்கரிப்பட்ட தேரில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.
வீதியில் வந்த தேரின் மீது பக்தர்கள் மிளகு, உப்பு உள்ளிட்டவைகளை தேர் மீது சூறையிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். திருத்தேர் முக்கிய மாட வீதிகளின் வழியாக சென்றது.