உள்ளூர் செய்திகள்

பஸ் - ஆட்டோ மோதி விபத்து

Published On 2023-02-21 15:02 IST   |   Update On 2023-02-21 15:02:00 IST
  • 5 பேர் படுகாயம்
  • போலீசார் விசாரணை

அணைக்கட்டு:

அணைக்கட்டு அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சீனு (29), இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். மேலரசம்பட்டில் இருந்து ஒடுகத்தூர் பகுதிக்கு ஆட்களை ஏற்றிச் செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் சீனு ஆட்டோவில் அதே பகுதியை சேர்ந்த 5 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒடுகத்தூர் நோக்கி புறப்பட்டார். அப்போது, கொட்டாவூர் கிராமம் அருகே வந்த போது முன்னால் சென்ற தனியார் பஸ் மீது எதிர்பாராத விதமாக ஆட்டோ மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஆட்டோவின் அடியில் சிக்கியிருந்த பயணிகளை மீட்டனர். இதில், ஆட்டோவில் பயணம் செய்த தீபா(29), தினகரன்(50), ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும் 3 பயணிகள் லேசான காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பலத்த காயம் ஏற்பட்டவர்களை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News