வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் பெண் கைதிக்கு ஆண் குழந்தை பிறந்தது
- பிரசவ வார்டை சுற்றி போலீசார் பாதுகாப்பு
- சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்
வேலூர்:
தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த பேயதேவன் என்பவர் மனைவி நாகரத்தினம் (வயது 30). இவர் கஞ்சா வழக்கில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் நிர்வாக காரணங்களால் வேலூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். அப்போது அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அவ்வப்போது பரிசோதனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகரத்தினத்துக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரை ஜெயில் காவலர்கள் உடனடியாக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு நாகரத்தினத்துக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நாகரத்தினம் அனுமதிக்கப்பட்டுள்ள பிரசவ வார்டை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.