உள்ளூர் செய்திகள்

பெண் கொலை வழக்கில் 2 பேர் கைது

Published On 2023-11-04 13:36 IST   |   Update On 2023-11-04 13:36:00 IST
  • போலீஸ் நிலையம் முற்றுகை- பரபரப்பு
  • 4 மாதங்களாக போலீசார் தேடி வந்தனர்

வேலூர்:

பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி வளர்மதி (வயது 50). கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி விவசாய நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது மர்ம கும்பல் வளர்மதியை கழுத்தை அறுத்து கொலை செய்து, அவர் காதில் அணிந்திருந்த கம்மலை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோரின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த 4 மாதங்களாக குற்றவாளி களை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் பேரணாம்பட்டு அருகே உள்ள கோட்டைச்சேரி கிராமத்தை சேர்ந்த கணபதி என்கிற புகழேந்தி (23), ஓணாங்குட்டை கிராமத்தை சேர்ந்த ரவி (46) ஆகிய 2 பேரும் வளர்மதியை கொலை செய்து கம்மலை கொள்ளை யடித்து சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ரவி வழிப்பறி கொள்ளை, பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றவர். இவர் வழிப்பறி செய்யும் நகைகளை தனது கள்ளக் காதலிகளுக்கு கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

நேற்று காலை கணபதி என்கிற புகழேந்தியை போலீசார் பிடித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது அவரது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு வளர்மதியை கணபதி கொலை செய்யவில்லை எனவும், அவரை விடுவிக்க கோரியும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் அவர்களிடம் ஆதாரத்தோடு கணபதியை பிடித்ததாக தெரிவித்து எச்சரித்தார். இதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News