உள்ளூர் செய்திகள்

வீரபத்திர சாமி கோவில் ஆடித்திருவிழா

Published On 2023-08-06 15:38 IST   |   Update On 2023-08-06 15:38:00 IST
  • விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
  • விழாவுக்கான ஏற்பாடுகளை குருமன்ஸ் இன மக்கள், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தருமபுரி,  

தருமபுரி அருகே திப்பிரெட்டிஅள்ளியில் வீரபத்திர சாமி கோவில் ஆடித்திருவிழா சாமி கண் திறப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்களுக்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சியும், சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகளும் நடைபெற்றது.

பின்னர் விநாயகர், முருகன் மற்றும் மாரியம்மன் கோவில்களில் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து காட்டு கோவில் பெரியசாமி, காளியம்மாள் மற்றும் மூலமாளம்மாள் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நாளான நேற்று பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். கோவில் பூசாரி சிறப்பு பூஜைகள் செய்து தேங்காய் உடைக்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.

மேலும் சில பக்தர்கள் அழகு குத்தியும், மொட்டை அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பக்தர்கள் தங்களது குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்தப்பட்டது. இந்த விழாவில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீரபத்திர சாமிக்கு சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கும் விழாவும், நாளை (திங்கட்கிழமை) பொங்கல் வைக்கும் விழாவும், வீரபத்திர சாமி கோவில் திரும்பும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை குருமன்ஸ் இன மக்கள், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News