காரிமங்கலம் அரசு கல்லூரி மாணவிகளுக்கு ரூ.3.58 லட்சம் மதிப்பிலான சீருடைகள்
- ரூ.3.58 லட்சம் மதிப்பிலான சீருடைகளை ஐ.வி.டி.பி தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.
- மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கியமைக்கு ஐ.வி.டி.பி நிறுவனத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காரிமங்கலம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் பயிலும் 3000- க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
அவர்கள் அனைவரும் பல்வேறு பொருளாதார பின்னணியிலிருந்து கல்லூரிக்கு வருகின்றனர். அம்மாணவிகள் ஏற்றத் தாழ்வுகளின்றி, சமத்துவ மனப்பான்மையுடன் கல்லூரிக்கு வரும் பொருட்டு சென்ற கல்வியாண்டில் இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் மாணவிகள் அனைவருக்கும் இலவசமாக ஐ.வி.டி.பி நிறுவனம் சீருடைகளை வழங்கியது.
அதனைத் தொடர்ந்து இவ்வாண்டு இளங்கலை முதலாண்டு பயிலும் 680 மாணவிகளுக்கும் மற்றும் முதுகலை முதலாண்டு பயிலும் 125 மாணவிகளுக்கும் தலா ரூ.445 என மொத்தம் ரூ.3.58 இலட்சம் மதிப்பிலான சீருடைகளை ஐ.வி.டி.பி தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.
விழாவிற்கு முன்னிலை வகித்த கல்லூரியின் முதல்வர் கீதா கல்லூரி மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கியமைக்கு ஐ.வி.டி.பி நிறுவனத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இக்கல்லூரிக்கு கணிணி ஆய்வகம், கல்வி உதவித்தொகை, கொரோனா நிவாரணப்பணிகள், தையல் இயந்திரங்கள், அடிப்படை ஆங்கிலப்பயிற்சி என பல்வேறு கல்விப் பணிகளுக்காக இதுவரை ரூ.28.96 லட்சத்தை ஐ.வி.டி.பி நிறுவனம் செலவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.