உள்ளூர் செய்திகள்

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் அடிக்கடி மாயமாகும் உடன்குடி பஸ்கள்- பயணிகள் தவிப்பு

Published On 2022-11-09 09:31 GMT   |   Update On 2022-11-09 09:31 GMT
  • உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு அதிக அளவில் பஸ்கள் இயக்கப்படும்
  • நடைமேடையில் உடன்குடி சுற்றுவட்டார பயணிகள் கூட்டம் அலைமோதியது

நெல்லை:

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் காலை முதல் இரவு வரை உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு அதிக அளவில் பஸ்கள் இயக்கப்படும்.

உடன்குடி பஸ்

இதன் மூலம் தொழில் நிமித்தமாகவும், கல்லூரிகளுக்கு வருவதற்காகவும் ஏராளமானோர் நெல்லைக்கு வந்து செல்வார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக நெல்லையில் இருந்து உடன்குடிக்கு செல்லும் பஸ்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு காலை 11.50 மணி, மதியம் 12.30 மணி, 1.15 மணி அதனை தொடர்ந்து 2.30 மணிகளில் உடன்குடிக்கு பஸ் இயக்கப்படும். இந்த பஸ் ஸ்ரீவைகுண்டம், நாசரேத் வழியாக உடன்குடி செல்வதால் அந்த வழிகளில் உள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன் அடைந்து வந்தனர்.

பயணிகள் புகார்

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக 11.50 மணிக்கு இயக்கப்படும் பஸ்கள் அடிக்கடி நிறுத்தப்பட்டு விடுகிறது.தொடர்ந்து மதியம் 1.15 மணிக்கு இயக்கப்பட்ட பஸ் முழுமையாக ரத்து செய்யப்பட்டு விட்டது. தற்போது பயணிகள் 12.30 மணிக்கு இயக்கப்படும் பஸ்சை மட்டுமே நம்பி இருக்கும் நிலையில் சில நாட்களாக அந்த பஸ்சும் மாயமாகி விட்டதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

நேற்றும் அந்த பஸ் வராததால், அந்த நடைமேடையில் உடன்குடி சுற்றுவட்டார பயணிகள் கூட்டம் அலைமோதியது. பஸ்கள் அடிக்கடி மாயமாவது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து மாற்று பஸ் வசதி கேட்டாலும், அவர்கள் செய்து கொடுப்பதில்லை என்றும், பயணிகள் பரிதவிக்கின்றனர் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News