உள்ளூர் செய்திகள்

திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி விலை கடும் வீழ்ச்சி-சுரைக்காய் கிலோ ரூ.3-க்கு விற்பனை

Published On 2023-04-28 13:01 IST   |   Update On 2023-04-28 13:01:00 IST
  • திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி விலை கடும் வீழ்ச்சியானது
  • இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

திருச்சி:

திருச்சி மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களின் காய்கறி தேவைகளை பூர்த்தி செய்வதில் திருச்சியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட் பெரும் பங்காற்றி வருகிறது. இங்கு மாநகர மக்கள் அதிக அளவு சென்று காய்கறிகள் வாங்குகின்றனர். அதேபோன்று வியாபாரிகளும் காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரிகளிடம் கொள்முதல் செய்கிறார்கள். இந்த நிலையில் கடந்த இரு மாதங்களாக மலிவு விலையில் காய்கறிகள் கிடைப்பதால் பொதுமக்களும், இல்லத்தரசிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கிடையே இன்றைய தினம் மேலும் காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ சுரைக்காய் ரூ.3-க்கு விற்கப்பட்டது. அதேபோன்று கத்தரிக்காய் ரூ.7-க்கும், தக்காளி ரூ.8 முதல் ரூ.10-க்கும் சில்லறை விலையில் விற்கப்பட்டது.தக்காளி விலை வீழ்ச்சி தொடர்பாக தக்காளி மண்டி வியாபாரி ஹலீலுல் ரகுமான் கூறும் போது, ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி வி.கோட்டா பகுதிகளில் அதிக அளவு தக்காளி விளைச்சல் அடைந்துள்ளது.

இன்னும் தக்காளி சீசன் 2 மாதத்திற்கு தொடர்ந்து இருக்கும். 27 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.200 மட்டுமே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மழை பெய்து பயிர்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே விலை உயரும் வாய்ப்பு உள்ளது. மழை பெய்யாவிட்டால் இன்னும் இரண்டு மாதங்களுக்கு இதே விலையை நீடிக்கும். தக்காளி விலைந்துள்ளதால் அங்குள்ள விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நிறைய விவசாயிகள் தக்காளி அறுவடையை நிறுத்தி விட்டார்கள்.

சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் தொழிலாளர்கள் நலன் கருதி லோடு அனுப்புகிறார்கள் என்றார். காய்கறி வியாபாரி ரமேஷ் என்பவர் கூறும் போது, பெரும்பாலான காய்கறிகள் சராசரியாக கிலோ ரூ.19-க்கு கீழ்தான் இருக்கிறது. அவரக்காய் ரூ.50-க்கும், பீன்ஸ் ரூ.50-க்கும் அதிகபட்சமாக விற்கப்படுகிறது. கேரட் ரூ.15, பீட்ரூட் ரூ.15, சவ்சவ் ரூ.12 விலைக்கு விற்கப்படுகிறது. முட்டைக்கோஸ் விலையும் இன்று வீழ்ச்சிடைந்துள்ளது. 90 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை முட்டைக்கோஸ் ரூ.300 மட்டுமே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை வீழ்ச்சியால் இல்லத்தரசிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags:    

Similar News