உள்ளூர் செய்திகள்

தில்லை நகரில் சார்பதிவாளர் அலுவலகம்

Published On 2023-03-18 08:53 GMT   |   Update On 2023-03-18 08:53 GMT
  • பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு உத்தரவு
  • உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூட்டம் குறையும்

திருச்சி,

திருச்சி மேற்கு தாலுகாவில் திருச்சி கோர்ட் அருகில் சார்பதிவாளர் அலுவலகம் இணை எண் 1 மற்றும் 3, உறையூர் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் இணை எண் 1 மற்றும் உறையூர் சார்பதிவகங்களில் அதிக அளவில் ஆவணங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதனால், இங்கு ஆவணங்களை பதிவு செய்வதால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது. மக்கள் எளிதாக ஆவண பதிவு மேற்கொள்ளும் வகையில் இந்த அலுவலகங்களில் இருந்து சில வருவாய் கிராமங்களை பிரித்து புதிதாக தில்லை நகரில் சார்பதிவாளர் அலுவலகம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.இந்நிலையில் தமிழக அரசின் வணிக வரி மற்றும் பதிவுத்துறை, திருச்சி பதிவி மாவட்டத்தில் தில்லைநகர் பகுதியில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் தொடங்க உத்தரவிட்டுள்ளது. இதற்காக நிர்வாக அனுமதி, வழங்கி அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்து அரசு செயலாளர் ஜோதி நிர்மலா சாமி அரசாணை பிறப்பித்து உள்ளார்.புதிதாக அமைக்கப்படும் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரு சார் பதிவாளர், 2 உதவியாளர் மற்றும் தலா ஒரு இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அவற்றோடு புதிய அலுவலகத்திற்கு வாடகை, அலுவலக தளவாடப் பொருட்கள், கணினி சாதனங்கள் வாங்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோர்ட் அருகில் உள்ள இணை எண் 1 மற்றும் உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் இனி மக்கள் கூட்டம் சற்று குறையும் .


Tags:    

Similar News