அழகு நிலையத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை கொள்ளை
- அழகு நிலையத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டது
- 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை
திருச்சி
திருச்சி மேலப்புதூர் பகுதியில் ஒரு அழகு நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையத்தின் மேனேஜராக பழனி நரிகல்பட்டியைச் சேர்ந்த செல்வக்குமார்(வயது32) பணியாற்றி வருகிறார். இந்த நிலையத்திற்குள் திடீரென உள்ளே புகுந்த 5 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
மேனேஜர் தர மறுக்கவே அவரை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்டிய நிலையில் அவரிடம் இருந்த 5 ஆயிரம் பணம், நிலையத்தில் இருந்த 8 செல்போன்களை எடுத்துக் கொண்ட மர்ம நபர்கள், அதன் பின்னர் அங்கு பணியாற்றும் ரம்யா என்பவர் அணிந்திருந்த 2 கிராம் தோடு, ரெண்டரை பவுன் தாலிச் செயின் ஆகியவற்றையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து செல்வகுமார் பாலக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். பாலக்கரை போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து பட்டப் பகலில் அழகு நிலையத்திற்குள் நுழைந்து ஆள் இருக்கும்பொழுதே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.