உள்ளூர் செய்திகள்

திருச்சியில் பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

Published On 2022-10-26 09:53 GMT   |   Update On 2022-10-26 09:53 GMT
  • தீபாவளி பண்டிகை முடிந்து ஊருக்கு திரும்பும் பயணிகள் கூட்டத்தால் திருச்சி பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள் நிரம்பி வழிந்தன
  • இதற்கிடையே பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்பட பஸ்கள் இயக்கப்படுகிறதா என்பது குறித்துஆய்வு நடத்த போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று இரவு 11 மணிக்கு திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்தார்

திருச்சி:

தீபாவளி பண்டிகை கடந்த 24-ந்தேதி கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் எந்தவித அச்சமும், இடையூறும், சிக்கலும் இன்றி கொண்டாடிடும் வகையில் அரசு தரப்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செம்மையாக செய்து தரப்பட்டு இருந்தன.

இதில் வெளியூர்களில் வசிப்பவர்கள், வேலை நிமித்தம் தங்கியிருப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாட வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.

கூடுதல் கட்டணத்தை மையமாக கொண்டு செயல்பட்ட தனியார் ஆம்னி பஸ்களுக்கு கடிவாளம் போடும் வகையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அதிரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு பயணிகளுக்கு நிம்மதியை அளித்தார்.

கடந்த 21-ந்தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களும், அடுத்ததாக தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் ஊர் திரும்புவர்களின் வசதிக்காக மேலும் 3 நாட்களும் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதில் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி சொந்த ஊர்களில் இருந்து தங்களது பணியிட ஊர்களுக்கு திரும்பி வருகிறார்கள்.

இதற்கிடையே பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்பட பஸ்கள் இயக்கப்படுகிறதா என்பது குறித்துஆய்வு நடத்த போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று இரவு 11 மணிக்கு திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்தார். அங்கு டிக்கெட் வழங்கும் இடம், சென்னை பஸ்கள் நிறுத்தப்படும் பகுதிகளில் ஆய்வு செய்தார்.

பயணிகளிடம் பஸ்கள் இயக்கப்படுவது மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அமைச்சர் வந்ததை அறிந்த போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உடனடியாக ஆய்வு நடைபெற்ற இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்களிடம் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொடர்ந்து 3 நாட்கள் வரும் 30-ந்தேதி பஸ்கள் அதிக எண்ணிக்கையில் இயக்க வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.

இரவு நேரம் என்றும் பாராமல் 11.30 மணி வரை ஆய்வு நடத்திய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பயணிகள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அதிகமாக இருந்தபோதிலும் சிரமமின்றி பஸ்களில் ஏறி பொதுமக்கள் பயணித்தனர்.

இதேபோல் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் அனைத்து பிளாட்பாரங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னை செல்லும் அனைத்து ரெயில்களிலும் முண்டியடித்து ஏறி இடம் பிடித்தனர்.

மொத்தத்தில் தமிழகத்தின் மத்திய மாவட்டமான திருச்சி தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிவிட்டு மீண்டும் ஊர் திரும்பும் பயணிகள் கூட்டத்தால் சற்றே திணறியது.

Tags:    

Similar News