உள்ளூர் செய்திகள்

பழங்குடியினர் பிரச்சினைக்கு ஆணையம் மூலம் தீர்வு காணப்படும்-அமைச்சர் கயல்விழி பேச்சு

Published On 2023-08-10 09:16 GMT   |   Update On 2023-08-10 09:16 GMT
  • 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 8 லட்சம் பழங்குடிகள் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனா்.
  • கூடலூா், ஊட்டி பகுதிகளில் ரூ.25 கோடி செலவில் 3 விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.

ஊட்டி,

ஊட்டியில் சர்வதேச பூா்வீக குடிகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பழங்குடியினர் நலத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதனை தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:-

உலகில் பழங்குடியினா் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இயற்கை வளங்களைப் பேணிக் காப்பதில் பழங்குடிகள் தலைமுறை தலைமுறையாக ஈடுபட்டு வருகின்றனா். 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 8 லட்சம் பழங்குடிகள் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனா்.

பழங்குடிகளின் மக்கள் தொகை ஆண்டுதோறும் குறைந்து வருவது வருத்தம் அளிப்பதாக உள்ளது. தமிழக அரசு பழங்குடியினா் ஆணையம் அமைத்து உள்ளது. இதன் மூலம் பழங்குடிகளின் பிரச்னைகளுக்கு விரைவாக தீா்வு காண முடியும்.

தமிழகத்தில் உள்ள 48 பழங்குடியின தொழிற்கல்விக் கூடங்கள் மூலம் 30 ஆயிரம் மாணவா்கள் படித்து வருகின்றனா். அதேவேளையில், பழங்குடி மாணவா்களிடையே பள்ளி இடைநிற்றல் அதிகம் உள்ளது. திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் ரூ.40 கோடியில் கல்லூரி விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. பழங்குடி மாணவா்களுக்கு இணையவழி நூலகமும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 9 மாணவா்கள் வெளிநாடுகளில் கல்வி பயின்று வருகின்றனா்.

தாட்கோ நிறுவனம் மூலம் பழங்குடி மாணவா்களுக்கு ஓட்டல் மேனேஜ் மெண்ட் உள்ளிட்ட படிப்புகள் உடன் வேலையும் பெற்று தரப்படுகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் ரூ.539 கோடி செலவில் 14 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. கூடலூா், ஊட்டி பகுதிகளில் ரூ.25 கோடி செலவில் 3 விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகள் விரைவில் முடிந்து, அங்கு மாணவ, மாணவியா் சோ்க்கப்படுவாா்கள். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தோடா் பழங்குடியின மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக, அமைச்சா் கயல்விழி செல்வராஜ் அவா்களுடன் சோ்ந்து நடனம் ஆடினாா். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஊராட்சி.ஒனாறிய தலைவர்கள் மாயன், கீர்த்தனா மற்றும் பழங்குடியின தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News