கோவில்பட்டியில் விதிமீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை
- வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன் தலைமையில் பசுவந்தனை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- தண்ணீர் ஏற்றிச் செல்லும் வாகனம் ஒன்று தகுதிச்சான்று இல்லாமலும், காப்புச்சான்று இல்லாமலும் இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களை முறையான ஆவணங்கள் இல்லாமலும், அதிகமான வேகத்திலும் இயக்குவதாக கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார்கள் வந்தது.
இதனைத்தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் பசுவந்தனை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 ஆட்டோக்கள் உரிய சான்றுகள் இல்லாமலும், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 29 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தண்ணீர் ஏற்றிச் செல்லும் வாகனம் ஒன்று தகுதிச்சான்று இல்லாமலும், காப்புச்சான்று இல்லாமலும் இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வாகனத்திற்கு ரூ. 7500 அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட வாகன உரிமையாளர்கள் அபராதத் தொகையை செலுத்திய பின்பு அவை விடுவிக்கப்படும். பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் முறையான ஆவணங்களுடன் அனுமதிக்கப்பட்ட அளவில் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்ல வேணடும். மிதமான வேகத்திலே வாகனத்தை இயக்க வேண்டும். விதிமீறி இயக்கினால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்தார்.