உள்ளூர் செய்திகள்

காளான் வளர்ப்பு குறித்து பயிற்சி முகாம்

Published On 2022-07-01 07:00 GMT   |   Update On 2022-07-01 07:00 GMT
  • கருப்பூரில் 40 பெண் தொழில் முனைவோருக்கான 10 நாள் உணவு காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.
  • பயிற்சியாளர்கள் பயிற்சியை நிறைவு செய்து வங்கி கடனுதவி பெற்று தொழில் தொடங்கி பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைய வேண்டும்.

பூதலூர்:

தஞ்சை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் மற்றும் கருப்பூர், கவ்டெசி தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய 40 பெண் தொழில் முனைவோருக்கான 10 நாள் உணவு காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் கருப்பூர் கவ்டெசி தொண்டு நிறுவன பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சி முகமை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கல்யாணபுரம் கிளை முதன்மை மேலாளர் சக்கரவர்த்தி குத்துவிளக்கு ஏற்றிதொடங்கி வைத்தார்.

மேலும் அவர் பேசுகையில் பயிற்சி நிறைவுக்கு பின் அனைவருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தொழில் தொடங்குவதற்கான வங்கி கடனுதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும், பயிற்சியாளர்கள் பயிற்சியை நிறைவு செய்து வங்கி கடனுதவி பெற்று தொழில் தொடங்கி பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைய வேண்டும் என்றும் உங்கள் அனைவருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும், கவ்டெசி தொண்டு நிறுவனமும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையமும் உறுதுணையாக இருக்கும் என்றும் கூறினார்.

விழாவில் பயிற்சியின் செயல்பாடுகள் குறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் உதவி இயக்குனர் லெட்சுமி பேசினார். கவ்டெசி தொண்டு நிறுவனத்தின் தலைவர் மாவடியான் வரவேற்றார். கவ்டெசி தொண்டு நிறுவன செயலாளர் மற்றும் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான கருணாமூர்த்தி, கல்யாணபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை காசாளர் ஆரோக்கியதாஸ், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை கவ்டெசி தொண்டு நிறுவன பணியாளர்கள் சுபாஷினி, கோமதி, கணேஷ்வரி, ஆர்த்தி, சரண்யா ஆகியோர் செய்திருந்தனர். விழா நிறைவில் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News