திட்டக்குடியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்களை படத்தில் காணலாம்.
வாகன ஒட்டிகள் அவதி: போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் திட்டக்குடி நகரம் போலீசாரை நியமிக்க கோரிக்கை
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தலைநகராக உள்ளது. இங்கு வயலப்பாடி, அகரம் பாடர், பெறுமுளை, சிறுமுளை, இ.கிரனூர், ஆவினங்குடி, பட்டூர், இடைச்செருவாய், கீழச்செருவாய் போன்ற கிராமங்கள் உள்ளது.இந்த கிராம மக்கள் தங்களுக்கு தேவையான பல்வேறு பொருட்களை வாங்கிச் செல்ல தினமும் திட்டக்குடிக்கு வந்து செல்வர். இது தவிர திட்டக்குடியில் உள்ள அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆயிரக்கணக்காக மாணவ, மாணவியர் தினமும் வந்து செல்கின்றனர்.
மேலும், திட்டக்குடி நகராட்சி, போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம், அரசு ஆஸ்பத்திரிக்கும் ஏராளமான பொது மக்கள் பல்வேறு பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வருகின்றனர். இது தவிர முகூர்த்த நாட்களில் வழக்கத்தைவிட கூடுதலான பொதுமக்கள் திட்டக்குடிக்கு வருகை தருகின்றனர்இதனால் திட்டக்குடி நகரம் தினமும் அதிகாலையில் இருந்து இரவு வரை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். அதிலும் குறிப்பாக திட்டக்குடி, ராமநத்தம் மாநில நெடுஞ்சாலையில் மாலை நேரங்களில் அதிக அளவில் கனரக வாகனங்கள், கல்லூரி வாகனங்கள், கரும்பு டிராக்டர்கள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் அதிகளவில் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் தினமும் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள் தங்களது வீட்டிற்கு செல்ல பஸ்சிற்காக காத்திருக்கின்றனர். ஆனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிவிடும் அரசு பஸ் தினமும் 1 மணி நேரத்திற்கு மேலாக தாமதமாகவே பஸ் நிலையம் வருகிறது.
திட்டக்குடியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீஸ் பிரிவை தனியாக அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனை அமைக்காமல் மாவட்ட நிர்வாகமும், போலீஸ் துறையும் காலங்கடத்தி வருகிறது.
எனவே திட்டக்குடியில் போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். போக்குவரத்து போலீசாரை வைத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பொது மக்கள் மற்றும் வாகன ஒட்டிகளில் கோரிக்கையாக உள்ளது.