உள்ளூர் செய்திகள்

பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்- அதிகாலை 4 மணி நேரம் வாகனங்கள் இலவசமாக அனுமதி

Published On 2022-08-16 10:00 GMT   |   Update On 2022-08-16 10:00 GMT
  • ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
  • தாம்பரத்தில் அதிகாலையில் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

செங்கல்பட்டு:

கடந்த13-ந்தேதி முதல் நேற்றுவரை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

சென்னையில் இருந்து மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை முதலே கார், ரெயில், அரசு மற்றும் ஆம்னி பஸ் மூலம் சென்று இருந்தனர். இதற்காக சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் விடுமுறை முடிந்து நேற்று மாலை முதலே வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்பி வரத்தொடங்கினர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் நள்ளிரவில் சென்னை நோக்கி ஒரே நேரத்தில் வந்ததால் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இன்று அதிகாலை சென்னையின் நுழைவு வாயிலான பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதைத்தொடர்ந்து வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் அதிகாலை 3 மணிமுதல் காலை 7 மணிவரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை அனுப்பினர். இதனால் நெரிசல் தவிர்க்கப்பட்டது. தாம்பரத்தில் அதிகாலையில் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசார் வாகன போக்குவரத்தை சரி செய்தனர்.

கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் கோயம்பேடு பஸ் நிலையத்தை சுற்றி உள்ள முக்கிய சாலைகளில் 3 போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் , 8 சப்- இன்ஸ்பெக்டர்கள், 15 போலீசார் என 30க்கும் மேற்பட்டோர் அதிகாலை 4மணி முதல் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் காரணமாக தேவையற்ற வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்படுவது தவிர்க்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலும் குறைந்தது.

Tags:    

Similar News