விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் பாதிப்பால் வியாபாரிகள் கவலை
- கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தடை விதிக்கப்பட்டது.
- இந்தாண்டு வருகிற ஆகஸ்ட் 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.
குமாரபாளையம்:
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி தமிழகத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தடை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு வீட்டில் வைத்து வழிபடக்கூடிய சிறிய அளவிலான சிலைகள் மட்டும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. பெரிய சிலைகள் வாங்கி வைத்தும் விற்பனை செய்ய முடியாமல் சிலை வியாபாரிகள் தவித்தனர்.
இந்தாண்டு வருகிற ஆகஸ்ட் 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஒரு மாதம் முன்பே சிலை வியாபாரம் தொடங்க வேண்டிய நிலையில், தற்போது கொரோனா பாதிப்பால் விழாவிற்கு தடை விதித்து விட்டால் எப்படி சிலைகள் விற்பனை செய்வது? மற்றும் எந்த நம்பிக்கையில் சிலைகளை வாங்கி வைக்க முடியும்? என்று புரியாமல் வியாபாரிகள் தவித்து வருகிறார்கள்.
இது குறித்து சிலை வியாபாரிகள் கூறியதாவது:-
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மதுராந்தகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல ஊர்களில் பெரிய அளவிலான சிலைகள் செய்து விற்பதும் வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதித்தால் என்ன செய்வது என்பதால் பெரிய அளவிலான சிலைகள் செய்வதா? வேண்டாமா? என விடை தெரியாமல் உள்ளோம்.
விநாயகர் சிலைகளை வாங்கி விற்கும் எங்களைப்போன்ற வியாபாரிகள் விநாயகர் ஊர்வல விழாவிற்கு தடை விதித்தால் பெரும் நஷ்டத்திற்கு ஆளாக நேரிடும். எனவே விநாயகர் சதுர்த்தி விழா குறித்து அரசு சரியான முடிவினை சொன்னால் சிலை உற்பத்தியாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.