உள்ளூர் செய்திகள்

யானைகளால் சேதப்படுத்தப்பட்ட கடைகள்.

வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்-யானைகள் அச்சுறுத்தல்

Published On 2023-10-08 11:20 IST   |   Update On 2023-10-08 11:20:00 IST
  • ஏரிச்சாலையை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர். மன்னவனூர், பூம்பாறை, பூண்டி உள்ளிட்ட மேல்மலை கிராமங்களுக்கும் சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.
  • மோயர் பாயிண்ட் பகுதியில் திடீரென காட்டுயானைகள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கிருந்த கடைகளை உடைத்து சூறையாடியது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏரா ளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது ஆப்சீசன் நடைபெற்று வருகிறது. இதமான சீதோஷ்ணம் நிலவுவதால் வடமாநிலங்களில் இருந்து தேனிலவு கொண்டாட புதுமண தம்பதியினர் வரதொடங்கி உள்ளனர்.

மேலும் வாரவிடுமுறை என்பதால் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி, மோயர்பாயிண்ட், குணாகுகை, பைன் பாரஸ்ட், தூண்பாறை, பிரையண்ட் பார்க், செட்டியார் பார்க், ரோஜா பார்க் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் நகர மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகுசவாரி செய்து மகிழ்ந்தனர்.

ஏரிச்சாலையை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர். மன்னவனூர், பூம்பாறை, பூண்டி உள்ளிட்ட மேல்மலைகிராமங்களுக்கும் சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.

இந்த நிலையில் மோயர் பாயிண்ட் பகுதியில் திடீரென காட்டுயானைகள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கிருந்த கடைகளை உடைத்து சூறையாடியது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் அச்சமடைந்தனர். பின்னர் பேரிஜம் பகுதிக்கு யானைகள் சென்றதால் நிம்மதி அடைந்தனர். அதனைதொடர்ந்து மோயர் பாயிண்ட் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று மீண்டும் இங்கு வந்த யானைகள் மற்றொரு கடைையயும் சேதப்படுத்தியது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வில்லை. பேரிஜம் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருந்தால் தடை என்றும், அதன்பின்னர் யானைகள் சென்றதும் அனுமதி அளிக்கின்றனர். எனவே யானைகளை நிரந்தரமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News