உள்ளூர் செய்திகள்

ஊட்டி பைக்காராவில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

Published On 2022-07-04 09:53 GMT   |   Update On 2022-07-04 09:53 GMT
  • தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
  • பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன், படகில் சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இந்த கால நிலையை அனுபவிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

நேற்று மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, படகு இல்லம், பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. அவர்கள் சுற்றுலா தலங்களை குடும்பத்துடன் கண்டு ரசித்தனர்.

ஊட்டி பைக்காரா அணை படகு இல்லத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்திருந்தனர். படகு சவாரி செய்து மகிழ்வதற்காக ஏராளமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டு பெற்றனர். பின்னர் தங்கள் குடும்பத்தினருடன், படகில் சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

படகு சவாரி செய்து முடித்ததும் சுற்றுலா பயணிகள், பைக்காரா அணையின் இயற்கை அழகை காட்சி மாடத்தில் நின்றபடி கண்டு ரசித்தனர்.

அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்படாததால் பைக்காரா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து இல்லை. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் இல்லாததை கண்டு ஏமாற்றம் அடைந்தனர்.

ஊட்டி-கூடலூர் சாலையில் பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா போன்ற இடங்களில் சாலையோரத்தில் அதிகளவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் முதலே தென்பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. பகல் நேரங்களில் லேசானது முதல் மிதமானது வரையும், இரவு நேரங்களில் பலத்த மழையும் பெய்கிறது.

அதிகாலையில் கடும மேகமூட்டம் மற்றும் கடும் குளிர் நிலவி வருகிறது. தொடர்ந்து கால நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் கோத்தகிரியில் உள்ள காட்சி முனை முழுவதும் மேகம் சூழ்ந்து காணப்படுகிறது. அங்கு வந்த சுற்றுலா பயணிகள் இதனை பார்த்து உற்சாகத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News