குன்னூர் அருகே சுற்றுலா வாகன டிரைவர் பலி
- மனோஜின் மோட்டார் சைக்கிளும், லாரியும் மோதி கொண்டன.
- மனோஜ் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் காந்திபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன்.
இவரது மகன் மனோஜ் (வயது29). இவர் சுற்றுலா வாகன டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை மனோஜ் சேலாசில் உள்ள தனது உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக குன்னூரில் இருந்து சேலாசுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அங்கு சென்று தனது உறவினரை சந்தித்து விட்டு, மீண்டும் மோட்டார் சைக்கிளில் குன்னூருக்கு வந்தார்.
காட்டேரியை அடுத்த கரும்பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து சரக்கு ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது.
அப்போது எதிர்பாராத விதமாக மனோஜின் மோட்டார் சைக்கிளும், லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டன. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த மனோஜ் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து குன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இறந்த மனோஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.