உள்ளூர் செய்திகள்

முன்னாள் அமைச்சர் வேலுமணி மனு மீது இன்று தீர்ப்பு: ஐகோர்ட்டு அறிவிப்பு

Published On 2022-11-30 02:03 GMT   |   Update On 2022-11-30 02:03 GMT
  • எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்எம்டி.டீக்காராமன் ஆகியோர் விசாரித்தனர்.

சென்னை :

சென்னை, கோவை மாநகராட்சிகளின் ஒப்பந்த பணிகளை வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றும் அ.தி.மு.க. முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பெரும் ஊழல் செய்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் புகார் செய்தனர்.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட்டிலும் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையில், எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்எம்டி.டீக்காராமன் ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், போலீஸ் தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, புகார்தாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, சுரேஷ், எஸ்.பி.வேலுமணி தரப்பில் டெல்லி மூத்த வக்கீல்கள் எஸ்.வி.ராஜூ, சித்தார்த் தவே, வக்கீல் ஜெ.கருப்பையாஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

இந்தநிலையில், அந்தத் தீர்ப்பு, இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு வழங்கப்படும் என ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவித்துள்ளது.

Tags:    

Similar News