நீலகிரியில் ரூ.39 லட்சம் மதிப்புள்ள புகையிலை ெபாருட்கள் பறிமுதல்
- சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
- 3 கால் டன் பான் மசாலா, ரூ.39 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மூட்டையாக இருந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தற்போது குட்கா மற்றும் புகையிலை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதவிர வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்குள் குட்கா, புகையிலை கடத்தி வரப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நீலகிரிக்கு சரக்கு லாரியில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நாடுகாணி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த லாரியை மறித்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது லாரியில் 3 கால் டன் பான் மசாலா, ரூ.39 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மூட்டையாக இருந்தது. இதையடுத்து போலீசார் அதனை கைப்பற்றினர்.
தொடர்ந்து லாரியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த மன்சூர் அலி(41), நசீர்(33) என்பதும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் புகையிலை பொருட்களை எங்கிருந்து வாங்கி வந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.