கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணியை
கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார்.
காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்- கலெக்டர் தகவல்
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் 10 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- குறுகியகால சிகிச்சை முறையில் சிகிச்சை வழங்கப்பட்டு மருந்து, மத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில், உலக காசநோய் தினத்தையொட்டி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற காசநோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, காசநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, காசநோய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்களை வழங்கினார்.
இந்த விழிப்புணர்வு பேரணி புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி ராயக்கோட்டை சாலை வழியாக மாவட்ட விளையாட்டரங்கில் முடிவடைந்தது.
இந்த பேரணியில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பேரணியை தொடங்கி வைத்து கலெக்டர் தீபக் ஜேக்கப் பேசியதாவது:-
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24-ந் தேதி உலக காசநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ராபாட் காக் என்ற விஞ்ஞானி காச நோய்க்கான காரணத்தை கண்டுபிடித்த தினத்தை நினைவு கூறும் வகையில் மார்ச் 24-ந் தேதி நாள் உலக காசநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் 10 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காசநோய் கண்டறிய மாவட்டத்தில் உள்ள 45 நுண்நோக்கி மையங்கள் செயல்படுகிறது.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனை மற்றும் ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில், காசநோய் கண்டறியும் உயர் தர கருவியின் மூலம் சுமார் 34,530 சளி பரிசோதனைகள் மூலம் 1,264 நுரையீரல் காசநோய் நோயாளிகள் மற்றும் 414 நுரையீரல் சாரா காசநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
காசநோய் கண்டறியப்பட்ட 1,678 நோயாளிகளில் 1,497 நோயாளிகளுக்கு நேரடி பணபரிமாற்றம் மூலம் மாதம் ரூ.500 சிகிச்சை காலம் முழுவதும் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. மேலும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஊட்டசத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு காசநோய் கண்டறியும் முகாம்கள் நடைபெற்றதில் சுமார் 34,582 நபர்களுக்கு காசநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அவர்களில் சுமார் 1,152 நபர்களுக்கு சளி மாதிரிகள் பெறப்பட்டதில் 24 நுரையீரல் காசநோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உடனடியாக அவர்களின் வீடுகளுக்கே சென்று நேரடி குறுகியகால சிகிச்சை முறையில் சிகிச்சை வழங்கப்பட்டு மருந்து, மத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
வருகிற 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத தமிழகம் உருவாக்க இலக்கு எய்திட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் காசநோய் பிரிவு துணை இயக்குனர் சுகந்தா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன், செரிப் மற்றும் மருத்துவ அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.