உள்ளூர் செய்திகள்

குரூப்-1, 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?: டி.என்.பி.எஸ்.சி. தகவல்

Published On 2022-12-30 03:26 GMT   |   Update On 2022-12-30 03:26 GMT
  • 1,089 கள ஆய்வாளர், வரைவாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நவம்பர் 6-ந்தேதி நடத்தப்பட்டது.
  • குரூப்-2 முதன்மைத் தேர்வு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி நடத்தப்படும்.

சென்னை :

தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக இருக்கும் பல்வேறு இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டதோடு, அதற்கான தேர்வையும் நடத்தி முடித்தது. அந்த வகையில் குரூப்-1, குரூப்-4 உள்பட பல்வேறு பதவிகளில் வரும் ஏராளமான பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நடந்தது.

இந்த தேர்வின் முடிவுகள் ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டு இருந்த மாதங்களில் வெளியாகும் என்று தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.

உதாரணமாக, 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கு சுமார் 18 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதிய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு முடிவு, முதலில் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர், டிசம்பர் மாதம் முடிவு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பிப்ரவரி மாதத்தில் தான் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து இருக்கிறது.

அதன்படி, 2022-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற முழு விவரத்தை தேர்வை நடத்திய டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டுள்ளது. அதன் விவரங்கள் வருமாறு:-

* 830 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் சேவைகள் பிரிவுக்கான தேர்வு முடிவு ஏற்கனவே ஆகஸ்டு மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அது 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும்.

* 7,301 பணியிடங்களுக்கு கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவு, அக்டோபரில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு, தற்போது 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும்.

* 1,089 கள ஆய்வாளர், வரைவாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நவம்பர் 6-ந்தேதி நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அது தற்போது ஜனவரி மாதம் வெளியிடப்படப்படும்.

* 92 பணியிடங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் 19-ந்தேதி நடத்தப்பட்ட குரூப்-1 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அது பிப்ரவரி மாதத்தில் வெளியாகும்.

இதேபோல், டி.என்.பி.எஸ்.சி.யால் நடத்தப்பட்ட மேலும் 8 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்த தகவலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, குரூப்-2 முதன்மைத் தேர்வு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி நடத்தப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

Tags:    

Similar News