திருவண்ணாமலையில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
- டிரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்து விளக்கம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
மாநில விரிவாக்க சீரமைப்பு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை அருகில் உள்ள காட்டாம்பூண்டியில் ஆள் இல்லா விமான மூலம் மருந்து தெளிப்பு (டிரோன் டெக்னாலஜி) என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் மேற்பார்வையில் ஆள் இல்லா விமானம் மூலம் மருந்து தெளிப்பது குறித்து பயிற்சி மற்றும் செயல்விளக்கம் நடைபெற்றது.
இதில் வேளாண்மை துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலையத்தை சேர்ந்த சரவணன் கலந்து கொண்டு ஆள் இல்லா விமான தெளிப்பு பற்றிய விளக்கம், அதன் பயன்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
அதோடு இப்கோ நிறுவன அலுவலர் அருண்குமார் ஆள்இல்லா விமான தெளிப்பு மருந்து கலக்கும் முறை மற்றும் நீரின் அளவு, வயலில் தெளிக்கும் நேரம், நிலத்தின் அளவு எந்திரத்தில் பதிவு செய்யும் முறை மற்றும் அமைப்பு பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உழவன் நண்பன் உள்பட 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் சுகன்யா நன்றி கூறினார்.