உள்ளூர் செய்திகள்

வந்தவாசி அருகே பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-05-19 13:21 IST   |   Update On 2023-05-19 13:21:00 IST
  • இலக்கு மக்கள் பட்டியலில் முறைகேடாக பயனாளிகள் தேர்வு செய்வதாக புகார்
  • 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த கல்லாங்குத்து கிராமத்தில் இலக்கு மக்கள் பட்டியலில் முறைகேடாக பயனாளிகள் தேர்வு செய்யப்படுவதாக புகார் தெரிவித்து அந்த கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மகளிர் மேம்பாட்டு உள்ளிட்டவைக்காக வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட கல்லாங்குத்து ஊராட்சியில் இலக்கு மக்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த பட்டியலில் பயனாளிகளை ஊராட்சி நிர்வாகம் முறைகேடாக தேர்வு செய்வதாக புகார் தெரிவித்து அந்த கிராமத்தில் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கடந்த திங்கள்கிழமையே இதுகுறித்து வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த கீழ்க்கொடுங்காலூர் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்ததையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News