படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆடிவெள்ளி விழா
- பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு
- போக்குவரத்து பாதிப்பு
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நேற்று மூன்றாம் ஆடி வெள்ளி விழா நடைபெற்றது.இதைமுன்னிட்டு அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்கக் கவச அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் ஏராளமான பக்தர்கள் வரிசையில் சென்று அம்மனை தரிசனம் செய்தனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் படவேடு ஆற்றுப் பாலம் அருகே உள்ள தற்காலிக பஸ் நிறுத்தத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
படவேடு ரேணுகாம்பாள் கோவில் செல்லும் சாலையில் இருபுறமும் நடைபாதைக் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து நெரிசலில் பக்தர்கள் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது.
ஏராளமான பெண்கள் தங்கள் உடம்பில் வேப்பன் சீலை அணிந்து கோவிலை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். மேலும் அம்மன், பரசுராமன் சிலைகளை தங்கள் தலையில் தூக்கிக் கொண்டு கோவிலை வலம் வந்தனர்.
இரவில் காமதேனு வாகனத்தில் சிவலிங்க பூஜை அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.அப்போது வாணவேடிக்கை, நையாண்டி மேளம், கரகாட்டம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரணோ கட்டுப்பாடு காரணமாக ஆடி வெள்ளி விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு கொரணோ கட்டுப்பாடு நீங்கியதால் பக்தர்கள் குடும்பம் குடும்பமாய் மாட்டு வண்டி, டிராக்டர், மினி டார் உள்பட பல்வேறு வாகனங்களில் வந்து ஆங்காங்கே பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.