உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து கட்டணம் செலுத்திய காட்சி.

உடுமலையில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் மையங்கள் திறக்கப்படுமா?

Published On 2023-06-08 08:22 GMT   |   Update On 2023-06-08 08:22 GMT
  • ஒரு சிலர் இணையவழி மூலமாக கட்டணங்களை செலுத்தி விடுகின்றனர்.
  • வசூல் மையங்கள் படிப்படியாக மூடப்பட்டு தற்போது ஒன்று மட்டுமே நடைமுறையில் உள்ளது.

உடுமலை :

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலமாக தொழிற்சாலைகள், அலுவலகங்கள்,வீடுகளுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலமாக பல்வேறு தரப்பட்ட மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். நாள்தோறும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கீடு செய்து அதற்கு தகுந்தவாறு மின் வாரியத்தின் மூலமாக கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்துமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாக மின்கட்டண வசூல் மையத்திற்கு சென்றும் கட்டணங்களை செலுத்தி வருகின்றனர். ஆனால் உடுமலை ஏரிப்பாளையத்தில் மின் பகிர்மான வட்ட அலுவலக வளாகத்தில் மின் கட்டண வசூல் மையம் ஒன்று மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-உடுமலை மின் பகிர்மான வட்ட அலுவலக வளாகத்தில் மின்சார பிரிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் ஆளுகைக்கு உட்பட்ட வீடுகள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்களை சேர்ந்த பொதுமக்கள் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர். ஒரு சிலர் இணையவழி மூலமாக கட்டணங்களை செலுத்தி விடுகின்றனர்.ஆனால் படிப்பறிவற்ற பொதுமக்கள் அலுவலகத்திற்கு சென்று செலுத்தி வருகின்றனர். இதற்காக செயல்பட்டு வந்த வசூல் மையங்கள் படிப்படியாக மூடப்பட்டு தற்போது ஒன்று மட்டுமே நடைமுறையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் கால் கடுக்க மணிக்கணக்கில் காத்திருந்து கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. அப்போது மூத்த குடிமக்கள் வரிசையில் காத்திருப்பதற்கு இயலாத நிலை உள்ளது.மேலும் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் பொதுமக்கள் தாகம் தீர்ப்பதற்கு ஏதுவாக குடிதண்ணீரும் வைப்பதில்லை. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். கூட்டத்திற்கு தகுந்தவாறு கூடுதல் மையங்களைத் திறந்து சேவையை அளிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும்.ஆனால் இது குறித்து அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.எனவே மின் கட்டண வசூல் மையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமித்து கூடுதல் வசூல் மையங்களை திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News