பார்த்தீனியம் மூலம் மண்புழு உரம் தயாரிப்பு - விவசாயிகளுக்கு வேளாண்துறை விளக்கம்
- பார்த்தீனியத்தின் களைகளை மக்குவதற்காக 45 முதல் 60 நாட்கள் வரை விட வேண்டும்
- செடியினை சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி பார்த்தீனிய செடிகளின் பாதிப்பினை முற்றிலுமாக கட்டுப்படுத்தலாம்.
உடுமலை:
பார்த்தீனியத்தை கொண்டு மண்புழு உரம் தயாரித்தல் குறித்து வேளாண் துறை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
பூ பூக்கும் முன் தேவையான பார்த்தீனிய களைகளை சேகரித்து அவற்றை 5 முதல் 10 செ.மீ., நீளவாக்கில் சிறிதாக நறுக்கி 10 செ.மீ., சுற்றளவில் கீழிருந்து 5 செ.மீ., உயரத்தில் அவற்றை அடுக்க வேண்டும். இவற்றின் மேல் 10 சதவீதம் மாட்டு சாண கரைசலை கொண்டு சமமாக தெளிக்க வேண்டும். இவற்றை 10 நாட்கள் மக்குவதற்காக விட வேண்டும். 5 நாட்கள் கழித்து 250 முதல் 300 மண் புழுக்களை மக்கிய உரத்தில் விட வேண்டும். மேலும் பார்த்தீனியத்தின் களைகளை மக்குவதற்காக 45 முதல் 60 நாட்கள் வரை விட வேண்டும். பார்த்தீனிய மண்புழு உரத்தை தொழு உரமாக பயன்படுத்தலாம்.
இதில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகியன அடங்கியுள்ளன. பார்த்தீனிய செடியானது அனைத்து தரப்பு உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதால் இதை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கிய பணியாகும். இச்செடியினை சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி பார்த்தீனிய செடிகளின் பாதிப்பினை முற்றிலுமாக கட்டுப்படுத்தலாம்.
பார்த்தீனிய விழிப்புணர்வு வாரம் இம்மாதம் 16-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது என வேளாண்துறையினர் தெரிவித்தனர்.