உள்ளூர் செய்திகள்

திருட்டு நடந்த கடையையும், சி.சி.டி.வி. கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளதையும் படத்தில் காணலாம். 

உடுமலை கடைகளில் தொடர் திருட்டால் வியாபாரிகள் அதிர்ச்சி

Published On 2023-09-11 16:33 IST   |   Update On 2023-09-11 16:33:00 IST
  • நகராட்சி பூங்காவிற்கு எதிராக வணிக வளாகத்தில் உள்ள மூன்று கடைகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது
  • கடையில் துணிகரமாக கொள்ளையடிப்பது போலீசாருக்கு சவால் விடும் செயலாக உள்ளது.

உடுமலை:

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ராமசாமி நகரை சேர்ந்தவர் செல்வநாராயணன் ( வயது 39).இவர் கபூர்கான் வீதியில் உழவர் சந்தைக்கு அருகே மளிகை கடை வைத்து உள்ளார். செல்வநாராயணன் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

காலை கடையை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது மளிகைப் பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் கல்லாவில் இருந்த பணம் ரூ. 30 ஆயிரம் திருட்டு போனதும் தெரியவந்தது.

இது குறித்து செல்வநாராயணன் உடுமலை போலீசில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

இதே போன்று நகராட்சி பூங்காவிற்கு எதிராக வணிக வளாகத்தில் உள்ள மூன்று கடைகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அதன் உரிமையாளர்கள் உள்ளே சென்று பார்த்தனர். எந்த பொருளும் திருடு போகவில்லை. அதன் பின்னரே அவர்கள் நிம்மதி அடைந்தனர்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,

உடுமலை பகுதியில் இரவு நேர ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும்.குறிப்பாக வணிக வளாகங்கள், விலைமதிப்பு மிக்க பொருட்கள் உள்ள கடைகள் அமைந்துள்ள பகுதியில் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

நேற்று நடைபெற்ற திருட்டு பிரதான சாலையில் அமைந்துள்ள கடையில் துணிகரமாக நடத்தப்பட்டு உள்ளது.இது போலீசாருக்கு சவால் விடும் செயலாகும்.அதில் ஈடுபட்ட நபர்களை விரைந்து பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். உடுமலை பகுதியில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவமானது கடை உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News