ராட்சத குடிநீர் குழாய் உடைந்து வீணாக வெளியேறிய தண்ணீர் - சாலைகள் சேதமடைந்ததால் வாகன ஓட்டிகள் அவதி
- பவானி ஆற்றில் இருந்து சிறுமுகை வழியாக ராட்சத குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
- ரோட்டின் ஒரு பகுதி முழுவதுமே சேதம் அடைந்தது.
அவிநாசி :
மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசி, மங்கலம் மற்றும் திருப்பூர் குடிநீர் தேவைக்காக 4-வது கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பவானி ஆற்றில் இருந்து சிறுமுகை வழியாக ராட்சத குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்தநிலையில் இன்று அதிகாலை குடிநீர் தேவைக்காக வழக்கம் போல தண்ணீர் வால்வு திறந்து விடப்பட்டது. குடிநீரின் அழுத்தம் அதிகமாக இருந்த காரணத்தினால் அவிநாசி- மங்கலம் சாலை ,வஞ்சிபாளையம் அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சீறிப்பாய்ந்து குடிநீர் வெளியேறியது.
இதன் காரணமாக குழாய் பதிக்கப்பட்டு இருந்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டு, ரோட்டின் ஒரு பகுதி முழுவதுமே சேதம் அடைந்தது. மேலும் அந்த இடத்தில் சாலை சேதமடைந்ததுடன் பள்ளமும் பெரிதாக ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து அவிநாசி கருணை பாளையம் பிரிவு அருகே உள்ள ராட்சத வால்வு மற்றும் அதன் அருகே உள்ள வால்வு உடனடியாக திறக்கப்பட்டு தண்ணீரின் வேகத்தை குறைத்தனர். இதன் காரணமாக நீரின் அளவு குறைய தொடங்கியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடிநீர் திட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சேதமடைந்த குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.