பல்லடம் அருகே நீர் வழித்தடங்களில் தாசில்தார் ஆய்வு
- மழைநீர் செல்ல வழிவகை செய்யாமல், நீர் வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்ததுள்ளனர்.
- அரசிடம் அனுமதி பெறாமல் சுமார் 100 மீட்டருக்கு மேல் நீர் வழி தடத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சிப் பகுதியில், கோவை திருச்சி - தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கட்டட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனியார் கட்டடத்திற்கு செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள நீர் வழித்தடம் தனியார் சிலரால் மண் கொட்டி மறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வந்த புகாரின் பேரில் பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். அப்போது மழைநீர் செல்ல வழிவகை செய்யாமல், நீர் வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த இடத்தை பார்வையிட்ட தேசிய நெடுஞ்சாலை துறை கோவை கோட்ட உதவி பொறியாளர் அழகர்ராஜா கூறுகையில்:- வழித்தடம் அமைக்க தனியார் இட உரிமையாளர்கள் அனுமதி பெறவில்லை. அரசுக்கு சொந்தமான சாலையோர இடத்தில் மண் கொட்டி வழித்தடம் அமைக்க வேண்டுமானால் நீர் செல்ல குழாய் அமைத்து, அதன் மீது அரசின் வழிகாட்டி விதிமுறைகளை பின்பற்றி வழித்தடம் அமைக்க வேண்டும்.
இதுகுறித்து விளக்கம் கேட்டு நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார். அரசிடம் அனுமதி பெறாமல் சுமார் 100 மீட்டருக்கு மேல் நீர் வழி தடத்தை தனியார் ஆக்கிரமித்தது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.